Saturday, March 04, 2006

நான்காம் பால பாடம் - கொலை

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கொலை


கொலையாவது உயிர்களை அவைகளுக்கு இடமாகிய உடம்பினின்றும் பிரியச் செய்தல். உயிர்களுக்கு இதஞ் செய்தலே புண்ணியமும் அகிதஞ் செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது.கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணியங்களெலாவற்றிற்குந் தலையாயுள்ளது.

கொலையில்லாத ஞானமே ஞானம், கொலையில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம். கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினாலே, சோர்வினாலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அருளோடு கூடிச் சாவதானமாக இருத்தல் வேண்டும். கொலை செய்ய ஏவினவரும், கொலை செய்யக் கண்டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய்தவரோடு பழகினவரும் கொலைப் பாவிகளே யாவர்.

கொலைப் பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெருவியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய நோய்களினால் வருந்தி உழல்வார்கள்.

பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னுயிரைக் கொல்லுதலும் பெருங்கொடும் பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்துகொள்ளும் பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினாலே வருத்தமுற்றாலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். கோபத்தினாலும் வியாதி முதலிய பீடைகளினாலும் தம்முயிரை வலிய விட்டவர் கும்பீபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினாயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாளகிரிக்குப் புறத்தில் உள்ள இருட்பூமியில் எண்ணில்லாத காலங் கிடப்பார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

0 comments: