Friday, March 17, 2006

நான்காம் பாலபாடம் - களவு

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
களவு

ளவாவது பிறருடைமையாய் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தான் போம் பொழுது பாவத்தையும் பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன்கொண்டு போய்விடும். களவுசெய்பவர், அப்பொழுது, 'யாவராயினும், காண்பாரே அடிப்பாரோ, கை கால்களைக் குறைப்பாரோ' என்றும், பின்பும் 'இராசா அறிந்து தண்டிப்பானோ' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினால், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினாலே களவு அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

களவு செய்தவர் இம்மையிலே அரசனாலே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா, உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பார். களவினாலாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவு செய்தவரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங்களிலெல்லாம், பிறராலே செய்யப்பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.

களவென்னுங் பெருங்குற்றத்தைச் சிறுபருவத்திற்றானே கடிதல் வேண்டும். கடியாதொழிந்தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்துன்பக்கடலில் வீழ்த்தி விடும். ஆதலாற் சிறுவர்களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டித்துத் திருத்தல் வேண்டும். அப்படி செய்யாது விட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளையும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரணராவார்கள்.

களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்னவரையும், களவு செய்தவருக்கு இடங்கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயங்களெங்கும் இருப்பு முளைகளை அறைந்து, வருத்துவார்கள். பாசத்தினாலே அவயவங்களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத் துன்பம் அனுபவித்த பின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூலரோகம் முதலிய நோய்களினாலே வருந்துவார்கள்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(3) கடிதல் - நீங்குதல்; துன்பக்கடல் - கடல் போன்ற மிகுந்த துன்பம்; அற்பக் களவு - சிறிய களவு.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய
இங்கே சொடுக்குங்கள்.

0 comments: