Friday, March 24, 2006

நான்காம் பாலபாடம் - வியபிசாரம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
வியபிசாரம்


வியபிசாரமாவது காம மயக்கத்தினாலே தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களை விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும் குறிக்கும். பிறன் மனையாளை விரும்புவோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடி புகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையாளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின், தான் பிறன் மனையாளை விரும்புவானா! விரும்பானே.

பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை. பிறராலே 'இவன் பரதாரசகோதரன்' எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண்மையை, பெரும்புகழை உடைய மகாவீரனை அவன் பகைவரும் அவன் இருக்கும் திக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட்டோராகிய மனைவியர் பிள்ளைகள் வேலைக்காரர் முதலாயினோரும், நன்கு மதியார். அச்சத்தாலும் பொருளாசையாலும், அவரெதிரே நன்குமதிப்பார் போல நடிப்பினும், தமது உள்ளத்தினும் அவரெதிரல்லாத புறத்தினும் அவமதிப்பே செய்வர். வியபிசாரஞ் செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபிசாரஞ் செய்து கெடுதற்குக் காரணராவர். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத்துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச்சொல் அவரின் இளையோரிடத்துஞ் செல்லாது. ஆதலினால், ஒழுக்கமில்லாதவர் பிறரைத் திருத்துதற்கும் வல்லராகார்.

தூர்த்தர்களோடு பழகுதலும், பெண்களுடைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல்களைப் படித்தலும் கேட்டலும், பார்க்கத்தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போதலும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப் போதலும், பெண்களோடு சூது சதுரங்கம் முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தரும வழியாகப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினாலும் நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியோரோடு கூடல் வேண்டும். சிறிது நேரமாயினும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பேறிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும். அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.

வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள்களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவைகளை உண்டற்குக் காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக்குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற்குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லாவற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.

பிறன் மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினி மயமாகிய இருப்புப் பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக் குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினி மயமாகிய சிலையிலே சிதறும்படி அறைவார்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு 'என் செய்தோம் என் செய்தோம்' என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.

பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டினவரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்துவர்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்ற நகரங்களினும் விழுத்தி வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வார்கள்.

வியபிசாரஞ் செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினால் வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினால் வருந்துவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) கன்னியர் - விவாகம் செய்யாத பெண்கள்; பொதுப் பெண்கள் - வேசையர்; தாசிப்பெண்கள்.

(2) ஆண்மை - வீரம்; பரதார சகோதரன் - பிறருடைய மனைவியரைத் தன் சகோதரமாக நினைத்து நடப்பவன்; (வடசொல்; பர - அந்நிய; தாரம் - மனைவி).

(3) தூர்த்தர்- காமுகர்; பிரதிமை - மண், கல், உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட ஆண், பெண் வடிவங்கள்; தீச்சிந்தை - தீய எண்ணம்.

(4) சந்ததி நாசம் - புத்திரோற்பத்தியின்மை, கருத்தரியாமை. இப்பந்தி முழுதும் சொற்பொருட் பின்வருநிலை என்னும் அணி அமைந்து உரைச் செய்யுளாகத் திகழ்கின்றமை காண்க. வியபிசாரம் ஈண்டுக் கூறிய தீமைகளுள் ஒவ்வொன்றையேனும் சிலவற்றையேனும் பலவற்றையேனும் தன்னையுடையோர்க்கு விளைத்தலின் இவ்வாறு பிரித்துக் கூறினார்.

(5) பிரமேகம் - மர்ம ஸ்தானத்துளே இரணமுண்டாகி ஒருவகை விண்ணீரொழுகும் நோய்; கிரந்தி - தேகத்தில் துர்நீர் கட்டுப்பட்டு நின்று புடைத்தெழுந்து புண்ணுண்டாகும் நோய்; பகரந்தம் - உயிர்நிலைகளாகிய மர்ம ஸ்தானங்களில் பெருங்கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாகும் நோய்; கல்லடைப்பு - மூத்திரத்திலுள்ள உப்பு இறுகிக் கல்லின் தன்மையடைந்து சலங்கழியாமல் தடைப்படுவதால் வரும் வேதனை நோய்; நேத்திர ரோக - கண்ணில் உண்டாகும் (பலவகை) நோய்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Friday, March 17, 2006

நான்காம் பாலபாடம் - களவு

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
களவு

ளவாவது பிறருடைமையாய் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தான் போம் பொழுது பாவத்தையும் பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன்கொண்டு போய்விடும். களவுசெய்பவர், அப்பொழுது, 'யாவராயினும், காண்பாரே அடிப்பாரோ, கை கால்களைக் குறைப்பாரோ' என்றும், பின்பும் 'இராசா அறிந்து தண்டிப்பானோ' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினால், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினாலே களவு அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

களவு செய்தவர் இம்மையிலே அரசனாலே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா, உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பார். களவினாலாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவு செய்தவரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங்களிலெல்லாம், பிறராலே செய்யப்பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.

களவென்னுங் பெருங்குற்றத்தைச் சிறுபருவத்திற்றானே கடிதல் வேண்டும். கடியாதொழிந்தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்துன்பக்கடலில் வீழ்த்தி விடும். ஆதலாற் சிறுவர்களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டித்துத் திருத்தல் வேண்டும். அப்படி செய்யாது விட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளையும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரணராவார்கள்.

களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்னவரையும், களவு செய்தவருக்கு இடங்கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயங்களெங்கும் இருப்பு முளைகளை அறைந்து, வருத்துவார்கள். பாசத்தினாலே அவயவங்களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத் துன்பம் அனுபவித்த பின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூலரோகம் முதலிய நோய்களினாலே வருந்துவார்கள்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(3) கடிதல் - நீங்குதல்; துன்பக்கடல் - கடல் போன்ற மிகுந்த துன்பம்; அற்பக் களவு - சிறிய களவு.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய
இங்கே சொடுக்குங்கள்.

Friday, March 10, 2006

நான்காம் பாலபாடம் - கள்ளுண்ணல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கள்ளுண்ணல்

ள்ளு, அவின், கஞ்சா முதலியவை அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள்ளுண்பவர் தமக்குச் சினேகர் செய்த நன்மையையும் தாங்கற்ற நூற் பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழி பாவங்களையும் அவைகளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறியார். இவ்வியல் புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி! கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.

கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தூரத்தே நீங்குவர். யாது செய்யினும் பொறுக்கும் மாதாவும், கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள். ஆனபின், குற்றம் யாதும் பொறாத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினாலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள்ளுண்டவர் அநேகர் தம் செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து திரிந்து, பின்னரும் பொருள் யாசித்துக் கள்ளுண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலராலும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள்ளுண்டல் எவ்வளவோரறியாமை!

கள்ளுண்டவரும், கள்ளுண்ணாதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண்டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலே கிடந்து வருந்துவர்கள். இயமதூதர்கள் அவர்களுடைய நாக்கை வாளினாலே சேதித்து, உலோகங்கள் உருக்கிய நீரை அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு பூமியிலே மலப்புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப் பற்குத்து நோயினாலும், பைத்தியத்தினாலும், வயிற்று நோயினாலும் வருந்துவார்கள்.

அநேகர் வாம மதத்திலே (வாம மதம் - சாக்தர்கள் மதம்) புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. களிப்பு - வெறி.

3. சேதித்து - வெட்டி.

4. வாம மதம் - 'சடமும் சித்துமாகிய எல்லாம் சத்தியின் பரிணாமமே. வாமநூலில் விதித்த முறையை ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி' என்ற கொள்கையுடைய சமயம்; அசுத்த சாக்த மதம். பிசாச பதம் - பேயாகப் பிறந்து பசியால் துன்பமுறும் பதவி.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


Saturday, March 04, 2006

நான்காம் பால பாடம் - கொலை

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கொலை


கொலையாவது உயிர்களை அவைகளுக்கு இடமாகிய உடம்பினின்றும் பிரியச் செய்தல். உயிர்களுக்கு இதஞ் செய்தலே புண்ணியமும் அகிதஞ் செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது.கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணியங்களெலாவற்றிற்குந் தலையாயுள்ளது.

கொலையில்லாத ஞானமே ஞானம், கொலையில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம். கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினாலே, சோர்வினாலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அருளோடு கூடிச் சாவதானமாக இருத்தல் வேண்டும். கொலை செய்ய ஏவினவரும், கொலை செய்யக் கண்டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய்தவரோடு பழகினவரும் கொலைப் பாவிகளே யாவர்.

கொலைப் பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெருவியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய நோய்களினால் வருந்தி உழல்வார்கள்.

பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னுயிரைக் கொல்லுதலும் பெருங்கொடும் பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்துகொள்ளும் பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினாலே வருத்தமுற்றாலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். கோபத்தினாலும் வியாதி முதலிய பீடைகளினாலும் தம்முயிரை வலிய விட்டவர் கும்பீபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினாயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாளகிரிக்குப் புறத்தில் உள்ள இருட்பூமியில் எண்ணில்லாத காலங் கிடப்பார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.