Friday, May 26, 2006

நாவலர் பாலபாடம் - பெரியோரைப் பேணல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
பெரியோரைப் பேணல்


பிதா, மாதா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமக்கை, தமையன் மனைவி, உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை அச்சத்தோடும் அன்போடும் வழிபடல் வேண்டும். அவர்கள் குற்றஞ் செய்தார்களாயினும், அதனைச் சிறிதும் பாராட்டாது பொறுத்துக் கொள்ளல் வேண்டும். இராசா யாது குற்றஞ் செய்யினும் அவனோடு சிறிதும் எதிர்க்காது அவனுக்கு அடங்கி நடத்தல் போலவே பிதா மாதா முதலாயினோருக்கும் அடங்கி நடத்தல் வேண்டும்.

பிதா மாதா முதலாயினோர் முட்டுப்படாவண்ணம் இயன்றமட்டும் அன்னவஸ்திர முதலியவை கொடுத்து, அவர்களை எந்நாளும் பாதுகாத்தல் வேண்டும். அவர்களுக்கு வியாதி வந்தால், உடனே மனம் பதைபதைத்துச் சிறந்த வைத்தியரைக் கொண்டு மருந்து செய்வித்தல் வேண்டும். அவர்கள் ஏவிய ஏவல்களைக் கூச்சமின்றிச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் தங்கள் கல்விக்கும் நல்லொழுக்கத்துக்கும் இடையூறாகப் பிதா மாதாக்கள் சொல்லுஞ் சொற்களை மறுத்தல் பாவமாகாது. "தந்தை தாய் பேண்" என்னும் நீதிமொழியைச் சிந்தியாது, மூடர்கள் அநேகர் தங்களை மிக வருந்திப் பெற்றுவளர்த்த பிதா மாதாக்கள் பசித்திருப்பத் தாமும் தம்முடைய பெண்டிர் பிள்ளைகளும் வயிறு நிறையப் புசித்துக்கொண்டு, தம்மையும் பொருளாக எண்ணி, தமக்கு வரும் பழிபாவங்கட்கு அஞ்சாது திரிகின்றார்கள். பிதா மாதாக்களையும் சுற்றத்தாரையும் வஞ்சித்து அன்னியர்களுக்கு உதவி செய்கின்றார்கள்.

பிதா மாதா முதலாயினோர் இறக்கும்பொழுது அவரைப் பிரியாது உடனிருத்தல் வேண்டும். அவர் மனம் கலங்கும்படி அவரெதிரே அழலாகாது. அவர் மனம் கடவுளுடைய திருவடியிலே அழுந்தும்படி, அறிவொழுக்கமுடையவரைக் கொண்டு அருட்பாக்களை ஓதுவிக்கவும் நல்லறிவைப் போதிப்பிக்கவும் வேண்டும். அவர் இறந்த பின்பு உத்தரக்கிரியைகளை உலோபமின்றித் தம் பொருளளவுக்கு ஏற்ப, விதிப்படி சிரத்தையோடு செய்து முடித்தல் வேண்டும். வருடந்தோறும் அவர் இறந்த திதியிலும் புரட்டாசி மாசத்திலும் சிராத்தம் தவறாமற் செய்தல் வேண்டும். அநேகர் தங்கள் பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை அன்னவஸ்திர முதலியவை கொடுத்துப் பேணாது அவர்களுக்குத் துன்பத்தையே விளைவித்து, அவர்கள் இறந்தபின்பு உத்தரக்கிரியைகளை உலகத்தார் மெச்சும் பொருட்டு வெகு திரவியஞ் செலவிட்டுச் செய்கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவோரறியாமை! இச்செய்கையால் வரும்பயன் யாது? உத்தரக்கிரியைச் சிறிது பொருள் செலவிட்டும் செய்யலாம், அதற்குச் சிரத்தையே முக்கியம். பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை முட்டுப்படாவண்ணம் அன்னவஸ்திரங் கொடுத்துப் பாதுகாத்தலிலே இயன்றமட்டும் பொருள் செலவிடுதலே ஆவசியகம்.

பிதா மாதா முதலிய பெரியோர்களைக் கடுஞ்சொற் சொல்லிக் கோபித்து உறுக்கிய பாவிகள், நரகத்திலே தங்கள் முகத்தை அட்டைகள் குடைந்து இரத்தங்குடிக்க, அதனாற் பதைத்து விழுவார்கள். பின்பு அவர்கள் சரீரம் நடுங்கி அலறும்படி இயமதூதர்கள் சுடுகின்ற காரநீரையும் உருக்கிய தாமிர நீரையும் அவர் கண்மீது வார்ப்பார்கள். அப்பெரியோர்களுக்கு ஏவல் செய்யக் கூசின பாவிகளுடைய முகத்தை இயமதூதர்கள் குடாரியினாலே கொத்துவார்கள்; அப்பெரியோர்களைக் கோபத்தினாலே கண் சிவந்து ஏறிட்டுப் பார்த்தவர்களுடைய கண்களிலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை உறுத்திக் காரநீரை வார்ப்பார்கள்.

பிதா மாதா முதலாயினோரை நிந்தித்தவர்களையும், அவர்களைப் பேணாது தள்ளிவிட்டவர்களும், பைத்தியத்தினாலும், நாக்குப் புற்றினாலும், நேத்திர ரோகத்தினாலும், காலிற்புண்ணினாலும், சர்வாங்க வாயு ரோகத்தினாலும், பெருவியாதியினாலும் வருந்துவர்கள். பிதா மாதா முதலாயினோரைப் பேணாதவர்களும் உபாத்தியாயருக்குக் கொடுக்கற்பாலதாகிய வேதனத்தைக் கொடாதவர்களும், குருவுக்குக் கொடுக்கற்பாலதாகிய காணிக்கையைக் கொடாதவர்களும், தரித்திரர்களாய்ப் பசியினால் வருந்திப் பெண்டிரும் பிள்ளைகளும் கதற இரக்கத்தகாத இடங்களெல்லாம் பிச்சையிரந்து உழல்வார்கள்.

பிதா மாதாக்களுக்குச் சிராத்தஞ் செய்யாதவர்களும், புரட்டாதி மாசத்திலே மகாளய சிராத்தஞ் செய்யாதவர்களும், சிரோரோகங்களினால் வருந்துவார்கள். புலவர்களாயினும், ஞானிகளாயினும், மூடர்களாயினும், பெண்களாயினும், பிரமசாரிகளாயினும், இறந்த தினச் சிராத்தத்தைச் செய்யாதொழிந்தால், கோடி சனனத்திலே சண்டாளராவார்கள்.

எவன் தன்னுடைய தாய் தந்தை முதலிய பந்துக்கள் வறுமையினால் வருந்தும்போது இம்மையிலே புகழின் பொருட்டு அன்னியர்களுக்குத் தானங்கொடுக்கின்றானோ, அந்தத் தானம் தருமமன்று. அது முன்பு தேன்போல இனிதாயிருப்பினும், பின்பு விஷம் போலத் துன்பப்படுத்தும். பார்க்கும்போது புகழுக்கு ஏது போலத் தோன்றினும் பின்பு நரகத் துன்பத்துக்கே ஏதுவாகும் என்பது கருத்து. எவன் தான் ஆவசியகமாகப் பாதுகாக்க வேண்டிய மனைவி பிள்ளை முதலாயினோரைத் துன்பப்படுத்திப் பரலோகத்தின் பொருட்டுத் தானஞ் செய்கின்றானோ, அந்தத் தானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தையே விளைவிக்கும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

பேணல் - பாதுகாத்தல், வழிபடல், விரும்பி (அன்பு செய்து) நடத்தல்.

(1) பாட்டன் - பிதாவின் தகப்பனும், மாதாவின் தகப்பனும்; பாட்டி - தகப்பனுடைய தாயும், தாயினுடைய தாயும்; பாராட்டாது - பொருட்படுத்தாமல்.

(2) கூச்சம் - கூசுதல், வெட்கம்; பொருளாக - மதிப்புடையவராக; வஞ்சித்து - வஞ்சனை செய்து; இதனை 'உணவுப் பந்தியில் வஞ்சனை செய்து படைத்தல்' என்புழிப் போலக் கொள்க.

(3) அருட்பாக்கள் - கடவுளின் திருவருளைப் பெற்றவர் அத்திருவருள் ஞானத்தாற் பாடிய பாடல்கள். அவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்ற நூற்பாடல்கள், உத்தரக்கிரியை - ஒருவரது மரணத்தின்பின் அவரைக் குறித்துச்செய்யுங் கருமங்கள்; அவை பிரேத தகனம், அந்தியேட்டி, சிரார்த்தம் போல்வன. உலோபம் இன்றி - குறையில்லாமல்; அர்த்தலோபம், மந்திரலோபம், கிரியாலோபம் முதலிய குறைகள் உண்டாகாபடி என்றவாறு. சிரத்தை - அன்பு; இறந்த திதி, பிரதமை, துவிதியை முதலிய பதினைந்தனுள் இறந்த தினத்துக்குரிய திதி. வருடந்தோறும் இறந்த திதியிற் செய்வது 'வருஷ சிராத்தம்' எனவும், புரட்டாசி மாசத்துக் கிருஷ்ணபக்ஷத்திற் செய்வது 'மகாளய சிராத்தம்' எனவும் சொல்லப்படும். சீவந்தர்களாய் - சீவிப்பவர்களய், உயிருடன் வாழ்பவராய்; பேணாது - பாதுகாவாது; ஆவசியகம் - அவசியத்தன்மை வாய்ந்தது. கட்டாயஞ் செய்ய வேண்டியது; அவசியத்தோடு கூடியது. (ஆவசியகம் - வடசொல்).

(4) உறுக்கிய - அதட்டின; கார நீர் - கந்தகத் திராவகம் கறியுப்புத் திராவகம் போன்ற காரமுள்ள நீர்ப் பதார்த்தம்; இவை பட்டதேகம் வெந்து புண்கொள்ளும்; உருக்கிய தாமிரநீர் - செம்பு என்ற உலோகத்தைக் கம்மியரின் உலைக்களத் தீயில் உருக்கித் திரவமாக்கிய நிலையுடையது. குடாரி கோடரி எனவும், கோடாலி எனவும் வழங்கும் ஆயுதம். ஏறிட்டுப் பார்த்தவர் - மாறுபட்டு உற்றுப் பார்த்தவர்.

(5) வேதனம் - சம்பளம்; காணிக்கை - தட்சிணை.

(6) சனனம் - பிறப்பு; சண்டாளர் - நீசர்.

(7) பந்துக்கள் - உறவினர்; (பந்து: வடசொல்). பரலோகம் - மேலுலகபதவி, புண்ணியலோகபதவி; பரம் - மேன்மை; லோகம் - உலகம்; உலக இன்பம்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, May 06, 2006

ஓரே மதம், அது அன்பு மதம்-பாபா

ஒரே மதம், அது அன்பு மதம் - பாபா

கவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:
  • தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது.
1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல்.
2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல்.

3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.

  • எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை.
  • மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல்.
  • இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா:

1. ஒரே மதம் அது அன்பு மதம்
ஒரே ஜாதி அது மனித ஜாதி
ஒரே மொழி அது இதய மொழி
ஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.

2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.

3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.

4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.

5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.

6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.

7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்.

நன்றி: கல்கி (26.1.1992)

இன்று (06 மே 2006) ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தாயார் ஈஸ்வராம்மா அவர்களின் பிறந்ததினம் உலகெங்கும் பாபா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரை பக்திப்பூக்களில் பதியப்படுகிறது.

மேலும் வாசிக்க: மனிதாபிமானமே இவர் மதம்

Friday, May 05, 2006

நாவலர் பாலபாடம் - செய்ந்நன்றி அறிதல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
செய்ந்நன்றியறிதல்

செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. காரணமின்றிச் செய்த உதவிக்கும், காலத்தினாற்செய்த உதவிக்கும், பயன் தூக்காது செய்த உதவிக்கும், பூமியையும் சுவர்க்கத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவைக்கு இவை ஈடாகா. காரணமின்றிச் செய்த உதவியாவது தனக்கு முன்னே ஓருதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி. காலத்தினாற் செய்த உதவியாவது ஒருவனுக்கு இறுதி வந்தபொழுது ஒருவன் செய்த உதவி, பயன் றூக்காது செய்த உதவியாவது இவருக்கு இது செய்தால் இன்ன பிரயோசனங் கிடைக்கும் என்று ஆராயாது செய்த உதவி.

இந்த மூன்றுமல்லாத உதவியும், அறிவொழுக்க முடையவருக்குச் செய்தபோது, அவருடைய தகுதி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாகும். ஆதலினால், அறிவொழுக்கமுடையவர், தமக்குப் பிறர்செய்த உதவி தினையளவினதாயினும், அதனை அவ்வளவினதாக நினையாது பனையளவினதாக நினைப்பர்.

யாவராயினும் தமக்கு நன்றி செய்தவருடைய சிநேகத்தை விடலாகாது. ஒருவன்றானே முன்பு ஒருநன்றி செய்து, பின்பு தீமை செய்வானாயின், அவன் செய்த அவ்விரண்டினுள்ளும் தீமையை அப்பொழுதே மறந்து, நன்றியை எப்பொழுதும் மறவாமற்கொள்வதே மிக மேலாகிய தருமம். தமக்கு ஒரு நன்றி செய்தவர் பின்பு நூறு தீமைகளைச் செய்தாராயினும், மேலோர், அந்நன்றி ஒன்றையுமே உள்ளத்தில் வைத்துத் தீமை யாவையும் பொறுப்பர். தமக்கு நூறு நன்றி செய்தவர் பின்பு ஒரு தீமை செய்தாராயினும், கீழோர் அந்நன்றி நூற்றையும் மறந்துவிட்டு, அத்தீமையன்றின் பொருட்டு அவர்மேல் வைரஞ் சாதிப்பர்.

மகாபாதகங்களைச் செய்தவருக்கும் பிராயச் சித்தத்தினால் உய்வு உண்டாகும்; ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு உய்வு இல்லை. செய்ந்நன்றி மறந்தவர் அளவில்லாத காலம் நரகங்களிலே கிடந்து துன்புற்று, பின்பு பூமியிலே பிறந்து, வரதரோகம், சூலை, மசூரிகை, குட்டம் முதலிய வியாதிகளினால் வருந்துவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) காலத்தினாற் செய்த உதவி - மரண ஆபத்து நேர்ந்த பொழுது செய்த உதவி (ஆல் உருபு 7-ஆம் வேற்றுமைப் பொருட்கண் வந்த வேற்றுமை மயக்கம்). பயன் தூக்காது - பயனை ஆராயாமல் (எதிர்பாராமல்). இறுதி - மரணம், ஈண்டு மரணத்தை விளைவிக்கும் ஆபத்தையுணர்த்து.

(3) வைரம் - விரோதம், நீடித்தபகை.

(4) மகா பாதகங்கள் - பெரிய பாவங்கள்; உய்வு - பாவஞ் சூழாதபடி தப்பிக் கொள்ளல்; மசூரிகை - வைசூரி (அம்மை நோய்).

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.