Tuesday, June 23, 2026

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை - சிவ மூலமந்திர இயல்

 

கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை 

4. சிவ மூலமந்திர இயல்
 

1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?

கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.

5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

6. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.

7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?

சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.

8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?

உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.

9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?

வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை - விபூதி இயல்-1

 

கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை



3. விபூதி இயல்-1
 

1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.

3. விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.

10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?

மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?

முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)

15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை - புண்ணிய பாவ இயல்

 

கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 


2. புண்ணிய பாவ இயல்
 

1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் இரண்டுமாம்.

2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?

புண்ணியங்கள்.

3. புண்ணியங்கள் ஆவன யாவை?

கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.

4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.

5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?

பாவங்கள்.

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்

ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை - கடவுள் இயல்

 

கணபதி துணை

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்

சைவ வினாவிடை
 


1. கடவுள் இயல்


1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்?

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்?

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது?

திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?

சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.
 

திருசிற்றம்பலம்

  1. கடவுள் இயல்  
  2. புண்ணிய பாவ இயல்  
  3. விபூதி இயல்-1  
  4. சிவ மூலமந்திர இயல்  
  5. சிவாலய தரிசன இயல்  
  6. தமிழ் வேத இயல்  
  7. பதி இயல்  
  8. விபூதி இயல்-2  
  9. உருத்திராக்ஷவியல்  
  10. சிவலிங்கவியல்  
  11. பஞ்சாக்ஷரவியல்  
  12. நித்திய கரும இயல்