Friday, March 10, 2006

நான்காம் பாலபாடம் - கள்ளுண்ணல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கள்ளுண்ணல்

ள்ளு, அவின், கஞ்சா முதலியவை அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள்ளுண்பவர் தமக்குச் சினேகர் செய்த நன்மையையும் தாங்கற்ற நூற் பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழி பாவங்களையும் அவைகளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறியார். இவ்வியல் புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி! கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.

கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தூரத்தே நீங்குவர். யாது செய்யினும் பொறுக்கும் மாதாவும், கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள். ஆனபின், குற்றம் யாதும் பொறாத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினாலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள்ளுண்டவர் அநேகர் தம் செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து திரிந்து, பின்னரும் பொருள் யாசித்துக் கள்ளுண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலராலும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள்ளுண்டல் எவ்வளவோரறியாமை!

கள்ளுண்டவரும், கள்ளுண்ணாதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண்டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலே கிடந்து வருந்துவர்கள். இயமதூதர்கள் அவர்களுடைய நாக்கை வாளினாலே சேதித்து, உலோகங்கள் உருக்கிய நீரை அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு பூமியிலே மலப்புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப் பற்குத்து நோயினாலும், பைத்தியத்தினாலும், வயிற்று நோயினாலும் வருந்துவார்கள்.

அநேகர் வாம மதத்திலே (வாம மதம் - சாக்தர்கள் மதம்) புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. களிப்பு - வெறி.

3. சேதித்து - வெட்டி.

4. வாம மதம் - 'சடமும் சித்துமாகிய எல்லாம் சத்தியின் பரிணாமமே. வாமநூலில் விதித்த முறையை ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி' என்ற கொள்கையுடைய சமயம்; அசுத்த சாக்த மதம். பிசாச பதம் - பேயாகப் பிறந்து பசியால் துன்பமுறும் பதவி.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


0 comments: